அன்புள்ளங்களுக்கு,
நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவு ஏதும் போடவில்லையே என்ற உணர்வு ஏற்பட.. நமக்கு எல்லாம்.. அறிவு பேழையாக இருந்த சாந்தி விஜயா உயர்நிலை பள்ளியில் எங்கள் பேட்ச்-1990-1991 மாணவர்கள் கடந்த ஜனவரி ஒன்றாம் தேதியில் புத்தாண்டு அன்று ஒன்று கூடினோம்.. அதையே பதிவாக போட்டுவிடலாம் என்ற முடிவில் இதை எழுதுகிறேன்.
பரவசம் மிகுந்த, எங்களை எல்லாம் மகிழ்ச்சியில் ஆழ்த்திய அந்த நிகழ்வின் புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு வைத்திடலில் பேருவகை அடைகிறேன்..
( இது நாங்கள் வரவேற்பிற்கு வைத்த ஃப்ளெக்ஸ்)
பள்ளி தாளாளர் சேட்டு.. நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே புதிய பள்ளிக்கட்டிடத்தில் இவ்விழாவினை நடத்திட அனுமதி வழங்கவில்லை.. ஆனாலும் சோர்ந்துவிடாமல் பள்ளி நீண்ட நாட்களாக நடந்து வந்த பழைய பள்ளி கட்டிடத்திலேயே நடத்துவது என்ற முடிவுக்கு வந்தோம்.
பள்ளிக்கட்டிடத்தை சென்று பார்த்தபோது.. சற்றே சிதிலமான நிலையில் இருந்தாலும், கண்முன்னே நாம் ஓடி ஆடி ஆசிரியர்களைக் கண்டால் பதுங்கி கிடந்த காட்சி இன்னும் அழகான நினவுகளாய் சட்டமிட்ட புகைப்படங்களாய் கிடந்தன..
அவரவர்க்கு பிடித்தமான நினைவுக் கோர்வைகளை தேர்ந்து எடுத்து மனசுக்குள் ஒளித்து வைத்துக் கொண்டோம்..
ஜனவரி ஒன்றாம் தேதியினை ஏற்கனவே தீர்மானித்தபடியால் முதல் வேலையாக தொடர்பிலிருக்கும் மாணவர்களை கொண்டு விடுபட்ட மற்றையொரையும் தொடர்புகொள்ள முயற்சிகள் தொடங்கினோம்..
(பொறியாளர் திரு. சோமு.பழ.கருப்பையா)
சிறப்பு விருந்தினராக.. சிங்காரவைச் சேர்ந்த மின் பொறியாளர் திரு. சோமு.பழ.கருப்பையா (தொடர்புக்கு: 94432-08414) அவர்களை வரும்படி கேட்டுகொண்டோம்.. அவரும் மறுக்காது ஏற்றுக்கொண்டார்.. பின்னே இதுவரை சிங்காரா மின்நிலையம் கண்ட அதிகாரிகளுள் அவர் மெய்யாகவெ சிறந்தவர் அவர் என்பதற்கு இன்றைய சிங்காராவே சாட்சி. பண்பாளர், நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடையே தன்னம்பிக்கை பயிற்சி வகுப்புகளை கட்டணம் ஏதுமின்றி, மாணவர்களுக்கு ஊக்கப்பரிசுகளை வழங்கி நடத்திச் செய்துள்ளார்.
மாசற்ற சேவைக்கு இவரை அடையாளம் காட்டலாம். எனவேதான் இவரை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தோம்.
ஆசிரியர்கள் அனவரையும் அழைத்திருந்தாலும் திரு போலன் அவர்களும் தலைமை ஆசிரியர் திரு நடராஜன் (கணித ஆசிரியர்) அவர்களும் வர இயலாமற் போனது பெரும் வருத்தமே.தமிழய்யா திரு. ஆறுமுகம் அவர்கள் குறித்த நேரத்தில் வந்திருந்தார். அவரைக்கொண்டு நிகழ்ச்சியினை தமிழ்தாய் வாழ்த்துக்களுடன் துவங்கினோம். நீண்ட நாட்கள் கழித்து பாடுவதாலோ.. அல்லது உணர்ச்சி பெருக்காலோ எல்லொர் உதடுகளும் தடுமாற்றம் கொண்டன.
அதன் பின்னர் வரவேற்புரையினை தொடர்ந்து மாணவர்களை ஒவ்வொருவராக வந்து பள்ளிக்குப்பின்பான அவர்களது வாழ்க்கையினை சுருக்கமான உரைகளாக வழங்கினர். எங்கே!!?.. பாதிப்பேருக்கு உவகையின் வெளிப்பாடாக ஆனந்தக்கண்ணீரே. அதன் பின்னர் குழந்தைகளின் (எங்கள் பள்ளித்தோழியரின் வாரிசுகளும்தான்..!)
கலை நிகழ்ச்சி மற்றும் ஆசிரியர்களின் பேருரைகளுமாய் மீண்டும் பள்ளி விழாக்கோலமே பூண்டது..
சற்று தாமதமாகவே வந்தாலும் சற்றும் குறையாத அன்றைய அதே மிடுக்குடன் பள்ளிக்கு வந்தார் திரு.நடராஜன் அவர்கள். (சோஷியல்..சாரேதான்..)
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரைகளின் சாராம்சம் அடுத்த பாகத்தில் தட்டச்சேற்றுகிறேன்.
அதன் பின்னர் அருமையான எளிமையான மதிய விருந்துடன் விழா இனிதே நிறைவடைந்தது.
MASINAGUDI
